1764ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி
சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய நகரங்களில் முதன்முதலாக அஞ்சல் நிலையங்களைத் தொடங்கியது.
அப்போது, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகத்தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான்
அதனுடைய முதன்மை நோக்கமாக இருந்தது. நாளடைவில்
அஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதன் வழியாக ஒரு சிறு தொகையை வருமானமாக ஈட்டமுடியும்
என்பதை அரசு புரிந்துகொண்டது. உடனடியாக பணமதிப்புக்கு இணையாக பலவிதமான அஞ்சல்தலைகள்
உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அனுப்பும் கடிதத்தின் எடைக்குத் தகுந்தபடி கட்டணம்
முடிவுசெய்யப்பட்டு, அக்கட்டணத்துக்கு இணையான அஞ்சல்தலைகள் வழங்கப்பட்டன. அந்த அஞ்சல் தலைகளில், புராதனச்சின்னங்களின் படங்களும்
மாநகரத்தோற்றத்தின் படங்களும் லண்டன் அரசர்களின் படங்களும் அச்சிடப்பட்டன.